பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, 72 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நேற்று முன்தினம் பள்ளிகள் திறப்பு முதல் நாளில், மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை நிறைவடைந்து, பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பூ, இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு முதல் நாளிலேயே புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கப்பட்டன. அதனுடன் காலணிகள், கால் உறைகள், வண்ண பென்சில்கள், ஜாமென்ட்ரி பாக்ஸ், புவியியல் வரைபடங்கள் வழங்கப்பட்டன.
பள்ளிக்கு முதல் நாளில் வருகை தந்த அனைத்து மாணவ, மாணவியருக்கும் இலவச புத்தகம், நோட்டுகள் வழங்கப்பட்டன. வட்டார கல்வி அலுவலர் ராஜம்மாள் பங்கேற்று, அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர்களை சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆலோசனை வழங்கினார்.
நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் மதியழகன், பட்டதாரி ஆசிரியர்கள் திருநாவுக்கரசு, ஆனந்தகுமார், இடைநிலை ஆசிரியர்கள் கீதா, நந்தினி, குமரேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Leave a Reply