மலைப்பாதையில் வரையாடுகள் ;வாகன ஓட்டுனர்கள் கவனம்

வால்பாறை: வால்பாறை மலைப்பாதையில், கொண்டைஊசி வளைவுகளிடையே, வரையாடுகள் நடமாடுவதால், சுற்றுலாபயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும், என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேற்கு மலைத்தொடர்ச்சியில் அமைந்துள்ள வால்பாறை, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய இரு வனச்சரகங்களிலும், புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன.
இது தவிர வரையாடு, சிங்கவால்குரங்குகள் வால்பாறை மலைப்பகுதியில் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில், ஆழியாறு அணையிலிருந்து வால்பாறை மலைப்பகுதிக்கு வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதையில், வரையாடுகள் அதிக அளவில் உள்ளன.

மாநில வனவிலங்கான வரையாடுகள் ஆபத்தை உணராமல், ரோட்டில் உலா வருவதால், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில் தற்போது குளுகுளு சீசன் நிலவும் நிலையில், இயற்கையை ரசிக்க சுற்றுலா பயணியர் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளனர். சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வால்பாறை – பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கொண்டைஊசி வளைவுகளின் இடையே வரையாடுகள் நடமாடுவதால், சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க வேண்டும். வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தவோ, வரையாடுகளை போட்டா எடுப்பதோ, ‘செல்பி’ எடுக்கவோ, வரையாடுகளை துன்புறுத்தவோ கூடாது. மிறினால் வன உயிரினபாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.