பயணியின் ஷூவில் துப்பாக்கி குண்டு; கோவை விமான நிலையத்தில் பரபரப்பு

கோவை; கோவை விமான நிலையத்தில் இரண்டாம் நாளாக, பயணியிடமிருந்து துப்பாக்கி குண்டு பறிமுதல் செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியது.நேற்று மதியம், அபுதாபியில் இருந்து இண்டிகோ விமானம், கோவை வந்தது. பயணிகளின் உடமைகளை, மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர்(சி.ஐ.எஸ்.எப்.,) சோதனை செய்தனர். அப்போது பயணி ஒருவரின் ஷூவில், 22 மி.மீ., அளவுள்ள துப்பாக்கி குண்டு இருந்தது.விசாரணையில், அவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஷிபு மேத்யூ, 48 என்பதும் துபாயில் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனத்தில், 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதும் தெரிந்தது.இதையடுத்து, சி.ஐ.எஸ்.எப்., போலீசார் அவரை, கோவை பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணையில், தனக்கு துப்பாக்கி லைசென்ஸ் இல்லை என்றும் ஷூவில் துப்பாக்கி குண்டு எப்படி வந்தது எனத் தெரியவில்லை என்றும், ஷிபு மேத்யூ தெரிவித்துள்ளார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.