கிணற்றில் கொட்டிய அபாயகரமான கழிவு; சூலூர் பீடம்பள்ளி மக்கள் கலெக்டரிடம் புகார்

கோவை; பாசனக்கிணற்றில் அபாயகரமான ரசாயன கழிவுகளை கொட்டி, நிலத்தடி நீரை மாசடையச்செய்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.சூலுார் அருகே பீடம்பள்ளியில் உள்ள ஒரு பாசன கிணற்றில், கடந்த சில மாதங்களாக, 500 லாரிகளுக்கும் மேலாக பவுண்டரியிலிருந்து வெளியேறும், அபாயகரமான ரசாயன கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

இதனால் அருகே உள்ள விவசாய நிலங்கள், சுற்றுப்புற கிராம மக்கள், கால்நடைகள் மற்றும் அருகில் செல்லும் நீரோடைகள், மாசடைந்து பாதிக்கப்பட்டுள்ளன.

ரசாயன கழிவுகள் காற்றில் கலந்து, அருகில் உள்ள விவசாய நிலங்களில் பரவி, மண்வளம் பாதிக்கப்பட்டு, விவசாய பணி மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.அண்மையில் பெய்த மழை நீரோடு, இந்த ரசாயனக் கழிவுகள் கலந்து நிலத்தடி நீரை மாசு படுத்தியுள்ளது. இந்த ரசாயன கழிவு நீர், கனமழை பெய்யும் காலங்களில், விவசாய நிலங்களில் உள்ள நீரோடை வழியாக, பிரதான ஓடையில் கலந்து பீடம்பள்ளி, நடுப்பாளையம், பள்ளப்பாளையம், கண்ணம்பாளையம் மற்றும் சூலூர் வழித்தடங்களில் உள்ள, நீர்தேக்கத்தில் கலந்து நொய்யல் ஆற்றில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏப்., மாதத்தில், பீடம்பள்ளி ஊராட்சி செயல் அலுவலர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிறுவனத்தின் சார்பாக, மேலும் ரசாயன கழிவுகளை கொட்டுவதில்லை என ஊராட்சி அலுவலகம் வாயிலாக மக்களிடம் உறுதி அளித்தனர்.

இச்சூழலில் இரண்டு வார கால இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் இரண்டு ஏக்கர் பரப்பளவு நான்கு அடி உயரத்தில், கழிவுகளை கொட்டி, மாசு ஏற்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, பீடம்பள்ளி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.