கோவை: மருந்தில்லா காய்கறி உணவு, ஆரோக்கியத்தைப் பேணும் புரதம், வீட்டிலிருந்தபடியே வருவாய் என, மூன்று பலன்களையும் காளான் வளர்ப்பால் ஒண்றாக பெற முடியும் என்கிறது வேளாண் பல்கலையின், பயிர் நோயியல் துறை.வேளாண் பல்கலையில் 33 ஆண்டுகளாக காளான் வளர்க்க பயிற்சி அளிக்கப்படுகிறது. அதுவும் ஒவ்வொரு மாதமும் சரியாக 5ம் தேதி. கொரோனா பெருந்தொற்றுக் காலத்திலும், இடைவிடாமல் ஆன்லைன் வாயிலாக தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானரை தொழில்முனைவோராக மாற்றியிருக்கிறது இந்தப் பயிற்சி.

காளான் வளர்ப்பு குறித்து, பயிர் நோயியல் துறை பேராசிரியர் திரிபுவனமாலாவிடம் பேசினோம். அவர் பகிர்ந்து கொண்டதிலிருந்து…
எல்லாராலும் எளிதில் வளர்க்கக்கூடிய, மருந்தில்லா காய்கறி உணவு காளான். வெள்ளை காளான்களிலும் நச்சுக் காளான் உண்டு. வண்ணக் காளான்களிலும் உணவுக் காளான் உண்டு.
மழைக்காலத்தில், இடி மின்னல் அதிகம் இருக்கும் காலங்களில்தான் காளான் கிடைத்து வந்தது. புரதச் சத்து மிக்க இந்த உணவு ஆண்டு முழுதும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, காளான் வளர்ப்பு தொழில்நுட்பத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்.
புரதச் சத்து மிக்க உணவை அனைவருக்கும் கொண்டு சேர்த்தல், பெண்கள் வீட்டில் இருந்தே தொழில் செய்யலாம், சுயவேலைவாய்ப்பை உருவாக்குதல் என பல வகைகளிலும் காளான் வளர்ப்பின் நோக்கம் உள்ளது.
மொட்டுக் காளான், சிப்பிக் காளான், பால் காளான்கள் வளர்த்து விற்பனை செய்ய ஏற்றவை.
அனைத்து வகை காளானையும் மதிப்புக் கூட்டிய பொருட்களாக விற்பனை செய்து வருவாய் ஈட்டலாம். விதைகளை உற்பத்தி செய்தும் விற்கலாம்.விதை உற்பத்தியில் ரூ.1 செலவு செய்தால், ரூ.3.8 வருவாய் ஈட்டலாம். காளான் வளர்ப்பில் ரூ.2.4 வருவாய் ஈட்டலாம். மதிப்புக்கூட்டிய பொருட்களில் ரூ.2.9 வருவாய் ஈட்டலாம்.
வேளாண் பல்கலை சார்பில், மொட்டுக் காளானில் இரு ரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மித வெப்ப மண்டல பகுதிக்கேற்ப சிப்பிக் காளான்களில் 6 ரகங்கள், வெள்ளை, இளஞ்சிவப்பு, மஞ்சள், சாம்பல், அடர்சாம்பல் என பல்வேறு நிறங்களில் வெளியிடப்பட்டுள்ளன. பால் காளான்களில் 2 ரகங்கள் வெளியிட்டுள்ளோம்.
காளான்களை குறைந்த செலவில் சாகுபடி செய்யலாம். வீட்டிலேயே குறைந்த இடம் இருந்தால் போதும். 100 சதுர அடி பரப்பில் 20 கிலோ காளான் எடுக்கலாம். கிலோ ரூ.200 வரை விலை போகிறது.
ஒரு முறை விதைத்தால், 23வது நாளில் இருந்து 45வது நாள் வரை மூன்று முறை அறுவடை செய்யலாம்.
மொட்டுக் காளான்கள்தான் பொதுவாக சந்தையில் அதிகம் கிடைக்கும். மக்களும் விரும்பி வாங்குகின்றனர். பிரிஜ்ஜில் வைத்தால், பறித்தது முதல் 7 நாட்கள் வரை வைத்திருக்கலாம். சிப்பிக் காளான்களை 3 நாட்கள் வரையும், பால் காளான்களை 6 நாட்கள் வரையும் வைத்திருக்கலாம்.
சிப்பிக் காளான் சுவை மிகுந்தது. கிரேவி, மஞ்சூரியன், சில்லி சமைக்கலாம். பால் காளானில் நார்ச்சத்து மிக அதிகம். கேரளா ஆந்திராவில் அதிகம் விற்பனையாகிறது.
காளான் மிக ஆரோக்கியமான உணவு. நீரிழிவு, மூட்டுவலி, மூலம், மலச்சிக்கல்களுக்கு தீர்வு, விட்டமின் டி என ஏராளமான பயன் கொண்டது.
காளான் வளர்த்தால், பூச்சி மருந்தில்லா ஆரோக்கியமான உணவு கிடைக்கும் என்பதோடு, வருவாய்க்கும் உத்தரவாதம். பல்கலையில் ஒரு நாள் பயிற்சி மற்றும் 3 நாள் பயிற்சியும் வழங்கப்படுகிறது. அனைவரும் பங்கேற்கலாம். வழிகாட்டத் தயாராக இருக்கிறோம் என்கிறார் பேராசிரியர் திரிபுவனமாலா.
Leave a Reply