கண்முன்னே பறிபோகும் இந்து மயானங்கள்; நடவடிக்கைக்கு இந்து முன்னணி முறையீடு

கோவை; இந்துக்களின் மயானங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாதுகாக்குமாறு மாநகராட்சி நிர்வாகத்திடம் இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.இந்து முன்னணி கோவை மாநகர் மாவட்ட செயலாளர் மகேஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள், மாநகராட்சி அலுவலகத்தில் அளித்த மனு:

சமீபகாலமாக கோவை மாநகரில் இந்துக்களின் மயானங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. சொக்கம் புதுாரில் இந்துக்களின் மயானம் நீண்ட வருடங்களாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. அம்மயானத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, அரசு அனுமதி வழங்கியுள்ளது, அதிர்ச்சி அளிக்கிறது.

அப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மயானத்திற்கு பின்புறம் கல்விக் கூடமும் உள்ளது. மாணவ, மாணவியருக்கும் பெரும் நோய் அபாயத்தை உருவாக்கும்.
எத்தனையோ அரசு நிலங்கள் காலியாக இருந்தும், மயான நிலத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. செல்வபுரம் கல்லாமேடு பகுதியில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்துக்களின் மயானம் பயன்பாட்டில் உள்ளது.

நான்கு நாட்களுக்கு முன்பு, அதன் அருகே நிலம் வாங்கியவர்கள், மயான நிலத்தையும் ஆக்கிரமித்து அங்குள்ள, 65க்கும் மேற்பட்ட கல்லறைகளை அப்புறப்படுத்தியுள்ளனர். உடனடியாக அப்பகுதி மக்கள் திரண்டு, போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளிடம் மயான ஆக்கிரமிப்பை பற்றி எடுத்துக்கூறினர்.

அந்த மயானத்திற்கு என ஒதுக்கப்பட்ட ஒரு அறையில், தனியார் கட்டடம் கட்டுவதற்குரிய பொருட்களை அடுக்கி வைத்துள்ளனர். மயானத்தில் இருந்த ஆறு சந்தன மரங்களை அறுத்து எடுத்து சென்றுள்ளனர். இப்படி கோவையில் இந்துக்களின் பல சுடுகாடுகள், கண்முன்னே பறிபோகிறது. எனவே, இந்த இரு சுடுகாடுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

சொக்கம்புதுார் மயானத்தில் அமையும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.