கோவை; கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில், முதன்முறையாக சாலையோர வணிகர்களுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முகாம், சுகுணா கல்யாண மண்டபத்தில் நடந்தது. 867 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றதுடன், மருத்துவ சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.மாவட்டம் முழுவதும், 8000 சாலையோர உணவு வணிகர்கள் உள்ளனர். இவர்களுக்கான ஒருங்கிணைந்த முகாம் நேற்று நடந்தது. கோவை கலெக்டர் முகாமை துவக்கிவைத்தார்.

இதில், வணிகர்களுக்கு எப்.எஸ்.எஸ்.ஏ. ஐ., சான்றிதழ் பதிவின் அவசியம், சுத்தம், சுகாதாரம், உணவு பாதுகாப்பு விதிமுறைகள், உணவு கையாளும் விதம், கழிவு பொருட்கள் மேலாண்மை, உணவு கையாளும் முறை, நிறமிகள் பயன்பாடு, எவ்வித பொருட்கள் பயன்படுத்தலாம், பயன்படுத்தக்கூடாது… இப்படி அனைத்து விதமான பயிற்சியும் அளிக்கப்பட்டது.
அனைவருக்கும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., விதிமுறையின் படி, கண், தோல், தொற்று நோய் உள்ளதா என்ற பரிசோதனை செய்யப்பட்டு, மருத்துவ சான்றிதழ் வழங்கப்பட்டது.
எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு, ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் படி, பதிவு செய்து சான்றுகள் வழங்கப்பட்டன. கலப்பட உணவு கண்டுபிடிப்பது குறித்து, உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் விளக்கம் அளித்தனர்.
‘நாளிதழ் தாள்களில் பலகாரம் கூடாது’
ஒருங்கிணைந்த முகாமில் 867 பேர் பங்கேற்று, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ பதிவு, மருத்துவ சான்றிதழ் பெற்றுக்கொண்டனர். இதில், 515 பேர் முதன்முறை எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., பதிவு செய்தவர்கள். உணவு கையாளுதல் குறித்த பயிற்சியிலும் பங்கேற்றுள்ளனர். சுகாதாரம் இல்லாத இடங்களில் கடைகளை அமைக்க கூடாது. நாளிதழ் தாள்களில் பலகாரம் மடித்து தருதல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் பயன்படுத்துதல் கூடாது, என்பன உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆய்வின்போது இந்த விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும்.
Leave a Reply