கோவை: இளங்கோவன் எழுதிய, நொய்யல் பற்றிய புதினமான ‘நதியின் பிழையன்று’ நூல் வெளியீட்டு விழா, கோவை, இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடந்தது.செல்வம் ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குநர் நந்தகுமார் தலைமை வகித்தார்.
சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் நூலை வெளியிட்டு பேசியதாவது:

நொய்யல் என்ற ஓர் அழகிய நதியை சாக்கடையாக்கி விட்டோம். நாகரிகம், பண்பாடு, பொருளாதாரம் என, செழித்த ஒரு நதி நொய்யல். நொய்யல் தாயே இளங்கோவனுக்குள் இருந்து தன் வரலாற்றை எழுதியது போல் உள்ளது. நொய்யலைப் பற்றி முழுமையான விவரங்களோடு இந்நுால் புதினமாக படைக்கப்பட்டுள்ளது. நம் காலத்திலேயே, நொய்யலில் நன்னீர் திருப்பூரைச் சென்றடையச் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
முதல் பிரதியைப் பெற்றுக் கொண்ட, வனத்துக்குள் திருப்பூர் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராமன் பேசுகையில், ”இயற்கைக்கு மாறாக எது நடந்தாலும் அது சிக்கலையே உருவாக்கும். ஒரத்துப்பாளையம் அணையை மிக மோசமாக்கியது எங்கள் தலைமுறைதான். பிராயச்சித்தமாக அணைப்பகுதியில் ஆண்டுக்கு 100 ஏக்கருக்கு மரங்களை நட்டுப் பராமரிக்கிறோம். திருப்பூர் மாவட்டத்தில் 22லட்சம் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறோம். கோவையின் ஒரே போக்கிடமான நொய்யலை நாம் விட்டுவிடக்கூடாது. அதை சீரமைக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது,” என்றார்.
ஓசை அமைப்பின் தலைவர் காளிதாஸ் பேசுகையில், “இலக்கியச் சுவையோடு எழுதப்பட்ட ஆவணமாக உள்ள இந்த நுாலை, கல்லுாரிகளில் தமிழ்ப்பாடத்தில் வைக்கலாம்” என்றார்.
கொடிசியா தலைவர் கார்த்திகேயன் பேசுகையில், “கோவையின் பெருமையைக் காக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது” என்றார்.
எழுத்தாளர் இளங்கோவன் ஏற்புரையாற்றினார். தொழில் வர்த்தக சபை துணைத் தலைவர் துரைராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
Leave a Reply