மாணவிகளுக்கு தைரியம் தந்த ‘புராஜெக்ட் பள்ளிக்கூடம்’ திட்டம் அவ்வளவுதானா? விழிப்புணர்வு தொடர விருப்பம்

தொண்டாமுத்தூர்; கோவை மாவட்ட போலீசில், வெற்றிகரமாக செயல்பட்டு வந்த ‘புராஜெக்ட் பள்ளிக்கூடம்’ திட்டத்தை, மீண்டும் அமல்படுத்தி, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.கோவை மாவட்ட எஸ்.பி.,யின் கட்டுப்பாட்டில், மொத்தம், 33 சட்டம் ஒழுங்கு போலீஸ் ஸ்டேஷன்களும், 6 அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன்களும் உள்ளது. இதில், குற்றங்களை தடுப்பதற்காகவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், மாவட்ட போலீசார் சார்பில், பல்வேறு சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

திட்டங்களுக்கு வரவேற்பு


அத்திட்டங்கள் அமல்படுத்தியபோது, மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றன. கோவை மாவட்ட போலீசார் கொண்டு வந்த சிறப்பு திட்டங்களில் முக்கியமானதாக, பிராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம் செயல்பட்டது. அப்போதைய எஸ்.பி.,யாக இருந்த பத்ரிநாராயணன் கொண்டு வந்த இந்த திட்டம், அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றது.

காரணம், இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும், இத்திட்டத்திற்கென, தனியாக காவலர்கள் நியமிக்கப்பட்டு, அந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி கல்லூரிகளில், மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது.

கிடைத்தது தைரியம்


இந்த விழிப்புணர்வின் பலனாய், மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும், தைரியம் கிடைத்து, பள்ளி மற்றும் வீட்டுப்பகுதிகளில், தங்களுக்கு ஏற்பட்ட துயரங்கள் குறித்து, போலீசில் புகார் தெரிவிக்க துவங்கினர்.
குறிப்பாக, தங்களுக்கு நேர்ந்த பாலியல் வன்முறைகளை, மாணவியர் தைரியமாக வெளியே சொல்லத்துவங்கினர்.

இதன் அடிப்படையில் ஏராளமான போக்சோ புகார்கள் பெறப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அதேபோல, குட்கா பொருட்கள் விற்பனை குறித்தும், அதிக தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன. நிறைய வழக்குகள் பதிவு செய்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாகவே, கோவை மாவட்ட போலீசில், புராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டம் முடங்கியது.

மீண்டும் வேண்டும்


தற்போது, கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம், குட்கா பொருட்கள் பயன்பாடு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. பள்ளிகளின் அருகே உள்ள கடைகளிலும், குட்கா பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன், பெற்றோர் மொபைல் போன் வாங்கி தராததால், பிளஸ் 1 படிக்கும் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட, துயர சம்பவமும் நடந்துள்ளது. எனவே, பள்ளி மாணவர்கள் தவறான செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், தவறான முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும், புராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டியது அவசியம்.

மேம்படுத்தப்பட்ட திட்டம்


கோவை மாவட்ட போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனுக்காக, மாவட்ட போலீசார் சார்பில், புதிய திட்டம் செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விரைவில் அத்திட்டம் துவங்கப்பட்டு, முழுமையாக செயல்படுத்தப்படும்’ என்றார்.

புதிய திட்டம் துவங்காவிட்டாலும் பரவாயில்லை. பழைய திட்டத்தை தாமதமின்றி தொடர போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.