கோவை; சிறுவாணி அணை பராமரிப்புக்கு, கேரள நீர்ப்பாசனத்துறையினர், மேலும் ஐந்து கோடி ரூபாய் கேட்டுள்ளனர்.கேரள மாநிலத்தின் வனப்பகுதியில், சிறுவாணி அணை அமைந்திருப்பதால், அம்மாநில நீர்ப்பாசனத்துறை பராமரிக்கிறது. அதற்கான தொகையை, கோவை மாநகராட்சி ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

நீர்த்தேக்கப் பகுதியில் கசிவு ஏற்படுவதால், புனே தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய குழு, ஜன., மாதம் ஆய்வு செய்தது. இக்குழு பரிந்துரைப்படி, நீர்க்கசிவு ஏற்பட்டுள்ள இடங்களில் உள்ள துளைகளுக்குள், அதிக அழுத்தத்துடன் சிமென்ட் கலவையை செலுத்தி, அடைக்க முடிவெடுக்கப்பட்டது.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:
சிறுவாணி அணையில் பராமரிப்பு பணிகள், நீர்த்தேக்கப் பகுதியில் நடந்து வருகின்றன. அணை பராமரிப்பு, மறுசீரமைப்புக்காக, 50 கோடி ரூபாயை கேரள அரசு கேட்டது. இதுவரை, 19 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். தற்போது செய்து வரும் பணிக்காக, மேலும் ஐந்து கோடி ரூபாயை கேரள அரசு கோரியுள்ளது.
நீர்க்கசிவை சரி செய்வதற்கு மதிப்பீடு கேட்பதற்காக, புனே தேசிய அணைகள் பாதுகாப்பு குழுவினருடன் அடுத்த வாரம், ‘கூகுள் மீட்’ நடத்த உள்ளோம். அதில், அடுத்து என்ன செய்வது என்பது குறித்து விவாதிக்கப்படும். திட்ட அறிக்கை தயாரித்துக் கொடுக்க, கேரள நீர்ப்பாசனத்துறையிடம் கோரியுள்ளோம். சிறுவாணியில் என்னென்ன மேம்பாட்டு பணிகள் செய்ய வெண்டும் என்பது தொடர்பாக, துறை செயலர் மற்றும் தலைமை செயலருக்கு, மாநகராட்சியில் இருந்து கடிதம் எழுத உள்ளோம்.
இவ்வாறு, கமிஷனர் கூறினார்.
Leave a Reply