வால்பாறை; வால்பாறை அருகே பச்சமலை எஸ்டேட்டில், சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தை, வனத்துறை வைத்த கூண்டில் நேற்று அதிகாலை சிக்கியது.கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள பச்சமலை எஸ்டேட் தெற்கு பிரிவில், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மெனோஜ்முண்டா – மோனிகாதேவி தம்பதி தொழிலாளர்களாக பணியாற்றுகின்றனர். இவர்களது ஐந்து வயது மகள் ரோஸ்குமாரி, கடந்த 20ம் தேதி மாலை வீட்டின் முன்பாக விளையாடிய போது, தாயின் கண் முன்னே சிறுமியை சிறுத்தை கவ்வி சென்றது.சிறுமியை மீட்க, தொழிலாளர்கள் கூச்சலிட்டு விரட்டினர். ஆனால், சிறுத்தை தேயிலை எஸ்டேட்டினுள் புகுந்தது. மறுநாள் காலை போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, வனத்துறையினர் இணைந்து தேடுதலில் ஈடுபட்டு, சிறுமியின் சடலத்தை மீட்டனர்.இதையடுத்து, சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் இரண்டு கூண்டுகள் வைக்கபட்டன. இந்நிலையில், நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கூண்டில் இருந்த நாயை கவ்வி செல்ல வந்த சிறுத்தை, வசமாக கூண்டில் சிக்கியது. இதனையடுத்து, வால்பாறை வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணா, மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமையில், கூண்டில் பிடிப்பட்ட சிறுத்தையை மூடி வைத்தனர். அதன்பின், பொக்லைன் கொண்டு வரப்பட்டு, கூண்டை லாரியில் ஏற்றினர்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பச்சமலை எஸ்டேட் பகுதியில் சிறுமியை கொன்ற சிறுத்தை, அதிகாலையில் கூண்டில் சிக்கியது. பிடிபட்ட பெண் சிறுத்தைக்கு ஐந்து வயதிருக்கும். இந்த சிறுத்தை டாப்சிலிப் அடர்ந்த வனப்பகுதிக்குள் விடப்படும்,’ என்றனர்.
Leave a Reply