கோவை; கோவை மாநகராட்சி பள்ளிகளில் நடத்தப்படும் எல்.கே.ஜி., – யு.கே.ஜி., பிரிவுகளில், இதுவரை, 1,702 மாணவ – மாணவியர் சேர்ந்திருக்கின்றனர். மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறுகிறது.கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு கீழ், 83 ஆரம்பப்பள்ளிகள், 37 நடுநிலைப்பள்ளிகள், 11 உயர்நிலைப்பள்ளிகள், 17 மேல்நிலைப்பள்ளிகள் நடத்தப்படுகின்றன.

வழக்கமான புத்தகப் படிப்புகளுடன், மாணவ – மாணவியரின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில், பல்வேறு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பறை இசை, டிரம்ஸ் வாசித்தல், கராத்தே, செஸ், சிலம்பம், பரதநாட்டியம், கம்ப்யூட்டர் கல்வி உள்ளிட்டவை கற்றுத்தரப்படுகின்றன. அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு வருகினறன. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவதோடு, மாலை நேர சிற்றுண்டி வழங்கப்படுகிறது.
அதிகரிக்கிறது அட்மிஷன்!
இதன் காரணமாக, மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. பொதுத்தேர்வில் சாதித்த மாணவ – மாணவியருக்கு பரிசுத்தொகை, கேடயம் வழங்கப்படுகிறது.மாநகராட்சியால் நடத்தப்படும், 19 நடுநிலைப்பள்ளிகளில், எல்.கே.ஜி., – யு.கே.ஜி., வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
நடப்பு கல்வியாண்டில் (2025-26) மேலும், 59 வகுப்புகளுக்கு விரிவுபடுத்தப்பட்டன. இப்பள்ளிகளில், 607 மாணவர்கள், 631 மாணவியர் என, 1,238 மாணவ – மாணவியர் புதிதாக சேர்ந்திருக்கிறனர்.
1,702 மாணவ – மாணவியர்
ஏற்கனவே செயல்பட்டு வரும், 19 பள்ளிகளில், 247 மாணவர்கள், 217 மாணவியர் என, 464 பேர் சேர்ந்திருக்கின்றனர். மொத்தம், 1,702 மாணவ – மாணவியர், எல்.கே.ஜி., – யு.கே.ஜி., பிரிவில் சேர்ந்திருக்கின்றனர்.
ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 6,394 மாணவ – மாணவியர் மாநகராட்சி பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். இதுநாள் வரை, 8,096 பேர், மாநகராட்சி பள்ளிகளில் புதிதாக சேர்ந்திருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதனால், கடந்த கல்வியாண்டை காட்டிலும், நடப்பு கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, அபரிமிதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply