கோவை; கோவையில் வசந்தவாசல் கவிமன்றம் சார்பில், கவிஞர் கண்ணதாசன் படைப்புகள் குறித்து சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள வைஷ்ணவா காம்பிளக்ஸ் அரங்கில் நேற்று நடந்தது. வக்கீல் சண்முகம் தலைமை வகித்தார்.இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, கவிஞர் மருதுார் கோட்டீஸ்வரன், கண்ணதாசன் படைப்புகள் குறித்து பேசியதாவது:

கோவைக்கும், தமிழ் சினிமாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆரம்ப காலத்தில் கோவையில் இருந்துதான், பல தமிழ் படங்கள் தயாரிக்கப்பட்டன. எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இங்கிருந்துதான் நடித்தனர்.
கவிஞர் கண்ணதாசனின் திரைப்பட வாழ்க்கையும், கோவையில் இருந்துதான் துவங்கியது. ‘கன்னியின் காதலி’ என்ற படத்துக்கு, தன் முதல் பாடலை கோவையில் இருந்துதான் எழுதினார்.
கண்ணதாசன் பாடல்கள் எழுதிய பிறகுதான், சினிமா பாடல்களில் இலக்கிய நயம் கூடியது. கண்ணதாசன் கவிதைகள், கட்டுரைகள், நாவல்கள், திரைக்கதை வசனம் என, பல துறைகளில் தனது இலக்கிய ஆளுமையை வெளிப்படுத்தினார்.
இந்து மதத்தின் மீது, கண்ணதாசனுக்கு அதீத பற்று உண்டு. அதற்கு அவர் எழுதிய, ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற நுாலே சான்று.
ஆன்மிகத்தில் பற்றுள்ள இளைஞர்கள், கண்ணதாசன் எழுதிய ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்ற நுாலை அவசியம் படிக்க வேண்டும். ஆன்மிகத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை, அந்த நுால் விளக்குகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.
நாவலாசிரியர் முகில் தினகரன், கவிஞர்கள் மாரப்பன், சுந்தரராமன், பிரசாத், புதியவன், அருள்நிதி நடராஜன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
Leave a Reply