உற்பத்தி செலவு அதிகரிப்பு, மின் கட்டண உயர்வால் நெருக்கடியில் மில்கள்! மத்திய, மாநில அரசுகள் தலையிட கோரிக்கை

அன்னுார்; உற்பத்தி செலவு அதிகரிப்பு, மின் கட்டண உயர்வால் மில்கள் நெருக்கடியில் சிக்கியுள்ளன.இந்த பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.’மின் கட்டண உயர்வால் மில்கள் மூடுவது அதிகரிக்கும்,’ என உரிமையாளர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

கோவை புறநகரில் அதிக அளவில் ஸ்பின்னிங் மில்கள் உள்ளன. 3,000 ஸ்பின்டில் திறன் முதல், 50,000 ஸ்பின்டில் திறன் வரை உள்ள மில்கள் புறநகரில் கரியாம்பாளையம், கணேசபுரம், குன்னத்தூர், பசூர், அ. மேட்டுப்பாளையம், பொங்கலூர் பகுதியில் உள்ளன. இவை ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் காட்டன் கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவிடம் இருந்து பருத்தி மற்றும் பஞ்சு கொள்முதல் செய்கின்றன.

வெளிமாநிலங்களில் இருந்து பஞ்சு பேல்களும் கொள்முதல் செய்யப்படுகின்றன. அன்னுார் தாலுகாவில் பெரும்பாலும் 40ம் எண் மற்றும் 60ம் எண் நூல் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. சோமனுார் மற்றும் மகாராஷ்டிராவுக்கு நூல் அனுப்பப்படுகிறது. வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக வேலை வாய்ப்பு தருவது ஸ்பின்னிங் துறை. மின் கட்டணம் உயர்வால் மில்கள் மேலும் நஷ்டமடையும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது :தற்போது 356 கிலோ எடை கொண்ட பஞ்சு 57 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 40ம் எண் நூல் 50 கிலோ மூட்டை 11 ஆயிரத்து 500 ரூபாய்க்கும், 60ம் எண் நூல் 50 கிலோ மூட்டை 12,300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை கட்டுபடி ஆகாது.வங்கியில் கடன் பெற்று, ஸ்பின்னிங் மில்லை இயக்கி வருகிறோம். பஞ்சுக்கு நிலையான விலை இல்லாதது. பருத்தி பற்றாக்குறை, தொழிலாளர்கள் சம்பள உயர்வு, அதிக மின் கட்டணம், இறக்குமதி பஞ்சுக்கு அதிக வரி விதிப்பு, வங்கிக் கடன் வட்டி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்த தொழில் நசிந்து வருகிறது. ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஸ்பின்னிங் மில்களுக்கு மின் கட்டணம் குறைவு. இதனால் அங்கு ஸ்பின்னிங் மில்கள் அதிக அளவில் துவக்கி வருகின்றனர்.

தமிழகத்தில் மின் கட்டணம் அதிகம். அதிலும் பல்வேறு காரணங்களை கூறி கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது. தற்போது ஒரு யூனிட் 7 ரூபாய் 25 காசுலிருந்து 7 ரூபாய் 50 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. இது மேலும் கடும் சுமையை ஏற்படுத்தும். இதனால் மில்கள் மூடுவது அதிகரிக்கும். தற்போது பெரும்பாலான மில்கள் இரண்டு ஷிப்டும், சில மில்கள் ஒரு ஷிப்ட் மட்டுமே இயங்குகின்றன.

அன்னுார் தாலுகாவில் முன்பு இயங்கி வந்த 80 மில்களில், தற்போது, 50 மட்டுமே இயங்குகின்றன. மில்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் பலர் வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்று விட்டனர். சில மில்கள் வங்கி கடனுக்காக சீல் வைக்கப்பட்டுள்ளன. பஞ்சு, பருத்தி இறக்குமதிக்கு வரியை குறைக்க வேண்டும். வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும். பல லட்சம் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதால் மத்திய, மாநில அரசுகள் வட்டி மானியம் வழங்க வேண்டும்.

பருத்தி விவசாயிகளுக்கு அதிக ஊக்கம் அளித்து பருத்தியில் கூடுதல் விளைச்சல் தரும் ரகங்களை கண்டறிந்து பயிரிட செய்ய வேண்டும். மின் கட்டணத்தை ஒரு யூனிட் ஐந்து ரூபாயாக குறைக்க வேண்டும்.

இவ்வாறு, ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் கூறினர்.