கோவை: கோவை மாவட்டம் முழுவதும், புற்றுநோய் ஒருங்கிணைந்த பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், பரிசோதனைக்கு பொதுமக்களை வரவழைப்பதில் டார்கெட் நிர்ணயிக்கப்படுவதால், சுகாதார தன்னார்வலர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், ஆண்களுக்கு வாய், பெண்களுக்கு கர்ப்பப்பை மற்றும் மார்பகம் ஆகிய 3 வகையான புற்றுநோய்களுக்கு ஒருங்கிணைந்த பரிசோதனை திட்டம், மாநில அளவில், 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில், வீடுகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில், 504 சுகாதார தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கான பரிசோதனை, 160 கிராமப்புற நல மையங்கள், 89 ஆரம்ப சுகாதார நிலையம், 49 கிராமப்புற மையங்கள் என, 320 மையங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
முதல்கட்ட பரிசோதனையில் அறிகுறி இருப்பின், அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து, சுகாதார தன்னார்வலர்கள் சிலர் கூறியதாவது:
வீடு வீடாக சென்று பரிசோதனைக்கு வர அழைப்பு விடுக்க வேண்டும். அரசு செயல்படுத்தியுள்ள இத்திட்டம் மிகவும் அவசியமானது.
ஆனால், மக்களுக்கு இதன் முக்கியத்துவம் புரிவதில்லை. பலர் ஏதேனும் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சத்தில் வருவதில்லை. எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை; அப்புறம் ஏன் பரிசோதனைக்கு வர வேண்டும் என கேட்டு திட்டுகின்றனர்.
ஆதலால், பரிசோதனைக்கு மக்களை வரவைப்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது. சுயமாக 400 பேருக்கு அழைப்பு விடுத்தால், 4 பேர் கூட வருவதில்லை என்பதே உண்மை கள நிலவரம்.
டார்கெட் நியமிப்பதால், ஒரு சிலர் பொய் கணக்கு கொடுப்பதும் நடக்கிறது. இது, இந்நோய் பரிசோதனை மற்றும் சிகிச்சை நடைமுறை திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
என்ன செய்ய வேண்டும்?
‘இத்திட்டத்தை முழுமையாக பயனுள்ளதாக்க வேண்டுமெனில், முதல்கட்டமாக, ஒன்று அல்லது இரண்டு வட்டாரத்தை தேர்வு செய்து, தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து, அதிக பெண்கள் பணி செய்யும் நிறுவனங்கள், அதிக ஆண்கள் பணிசெய்யும் தொழிற்சாலைகளில், நேரடியாக பரிசோதனை முகாம் நடத்த வேண்டும். முகாம் நடைபெறும் இடத்தை சுற்றியுள்ள, கல்லுாரிகள், பிற நிறுவனங்களை சேர்ந்தவர்களை அழைத்து பரிசோதனை செய்தால், திட்டத்திற்கான நோக்கம் நிறைவேறும்’ என்கின்றனர் சுகாதார தன்னார்வலர்கள்.
Leave a Reply