
தொண்டாமுத்துார்; கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக, நொய்யல் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கோவை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த மாதம் முதல், தொடர் கன மழை பெய்து வருகிறது. இதனால், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஓடைகளில் நீர் ஆர்ப்பரித்து, நொய்யல் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, நொய்யல் ஆற்றின் கிளை வாய்க்கால்கள் மூலம் கோவையில் உள்ள குளங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.இதனால், கோவையில் உள்ள அனைத்து குளங்களும், நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையில், கடந்த, மூன்று நாட்களாக மீண்டும் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் காலை, 8:00 மணி முதல் நேற்று காலை, 8:00 மணி வரை, சிறுவாணி நீர் பிடிப்பு பகுதிகளில், 48 மி.மீ., மழையும், சிறுவாணி அடிவார பகுதிகளில், 60 மி.மீ., மழையும், தொண்டாமுத்தூர் பகுதியில், 36 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. இதன்காரணமாக, நொய்யல் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பணையில், வினாடிக்கு, 900 கன அடி தண்ணீர் வெளியேறி வருகிறது.கோவைக்கு, ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மழைப்பொழிவு மேலும் அதிகரித்து, நொய்யல் ஆற்றில் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply