விவசாயம் மேற்கொள்ள ஏராளமான கடன் திட்டங்கள்; ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்புக்கு பின்னும் நம்பிக்கை

கோவை,; ‘நகைக் கடன் புதுப்பிப்பில், ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு, சிலருக்கு ஏமாற்றம் அளித்தாலும், விவசாயம் மேற்கொள்வதற்கு பல கடன் திட்டங்கள் உள்ளன’ என, நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயத்துக்கான தங்க நகை கடன் திட்டம், விவசாயிகளுக்கு இடுபொருள் பயிர் கொல்லி மற்றும் உரம் போன்ற தேவைகளுக்காகவும், சாகுபடி செலவுகளுக்காகவும் வழங்கப்பட்டது.

Latest Tamil News

இந்நிலையில், நகைக்கடன் தொகையை முழுமையாக செலுத்தி, அந்த நகையை மீட்டு, மறுநாள் தான் நகையை மீண்டும் அடகு வைக்க வேண்டும் என, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது.

மாவட்ட முன்னோடி வங்கியின் ஓய்வு பெற்ற முதுநிலை மேலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:

வங்கி நகைக் கடனை புதுப்பிக்க புதிய நடைமுறையில், நிறை, குறைகள் இருந்தாலும், வங்கிகள் வாயிலாக, அரசின் ஏராளமான விவசாய திட்டங்களுக்கான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

புதிய நீர் மேலாண்மை திட்டங்களுக்கும், ஆழ்குழாய் கிணறு, பாசன கிணறு தோண்டுதல், நீர் சேமிப்பு தொட்டிகள் கட்டுதல், நீர்ப்பாசன வாய்க்கால்கள் ஆகியவற்றுக்கும் வங்கி கடன் வசதி செய்யப்பட்டுள்ளது.

ரப்பர் மரம், தென்னை மரம் வளர்ப்பு போன்ற திட்டங்களுக்கு, உடனடியாக விளைச்சல் ஏதும் இல்லாமல், நீண்ட கால பண தேவை உள்ளது.

விளைச்சல் வரக்கூடிய நேரத்தில், அதை மாதாந்திர மற்றும் அரையாண்டு கால தவணை போன்ற விளைச்சலுக்கு ஏற்ற திருப்பி செலுத்தும் காலம் வரைமுறையின் படி, வங்கி கடன் வசதி உள்ளது. ஆடு, பசு மாடு, கோழி வளர்ப்பு போன்ற திட்டங்களுக்காக வங்கி கடன்கள் வழங்கப்படுகின்றன. விவசாய கடன்களை, வங்கியில் தகுதியின் அடிப்படையில் எளிதாக பெற, விவசாய அதிகாரிகள் வங்கிகள் சார்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு, அவர் கூறினார்.