கோவை; கோவை நகர் பகுதியில் ஏற்பட்டுள்ள குப்பை மற்றும் தெருநாய் பிடிக்கும் பிரச்னை தொடர்பாக, மேயர் நடத்திய கூட்டத்தில், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்கவில்லை.கோவை மாநகராட்சியில் குப்பை அள்ளும் பணியில் இருந்த நிரந்தர தொழிலாளர்கள் பலரும் ஓய்வு பெற்றுள்ளனர். அதனால், குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனம் கூடுதலாக தொழிலாளர்களை நியமிக்க வேண்டியும், தெருநாய் பிரச்னைகளை தீர்ப்பது தொடர்பாகவும் விவாதிக்க, சிறப்பு கூட்டத்துக்கு மேயர் ரங்கநாயகி ஏற்பாடு செய்திருந்தார்.துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டல தலைவர்கள் பங்கேற்றனர். மண்டல சுகாதார அலுவலர்கள், குப்பை மேலாண்மை நிறுவன பொறுப்பாளர்கள், தெருநாய் பிடிக்கும் நிறுவன பிரதிநிதிகள், சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் மற்றும் பூங்கா இயக்குனர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பூங்கா இயக்குனர் மற்றும் தெருநாய் பிடிக்கும் நிறுவனத்தினர் மட்டும் பங்கேற்றனர்.

மண்டல சுகாதார அலுவலர்கள் மற்றும் குப்பை மேலாண்மை நிறுவன பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக விசாரித்தபோது, சென்னையில் இருந்து வந்திருந்த அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்துக்கு, சுகாதார அலுவலர்கள் சென்றிருந்தது தெரியவந்தது.
மேயர் ரங்கநாயகியிடம் கேட்ட போது, ”வேலைநிறுத்தம் செய்தவர்களிடம் பேச்சு நடத்த, கமிஷனருக்கு கலெக்டர் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறார். பேச்சுவார்த்தைக்கு சென்றதால், அதிகாரிகள் கூட்டத்துக்கு வரவில்லை. டாக்டர் மட்டும் வந்திருந்தார்,” என்றார்.
Leave a Reply