பரம்பிக்குளம் நீர்மட்டம் 62 அடியானது! முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, பரம்பிக்குளம் அணை நீர்மட்டம், 62 அடியாக உயர்ந்ததையடுத்து, முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சி, டாப்சிலிப் அருகே கேரள வனப்பகுதியில், பரம்பிக்குளம் அணை அமைந்துள்ளது. பரம்பிக்குளம் – ஆழியாறு பாசன திட்டத்தில் உயிர் நாடியாக விளங்கும் பரம்பிக்குளம் அணை, 72 அடி உயரம் கொண்டது. மொத்தம், 17 டி.எம்.சி., நீர் இருப்பு வைக்கலாம்.

இந்த அணையில் சேகரிக்கும் நீர், துாணக்கடவு, பெருவாரிப்பள்ளம் வழியாக சர்க்கார்பதி கொண்டு வரப்பட்டு, நீர் மின்உற்பத்திக்கு பின், காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது.கடந்தாண்டு, பருவமழை கை கொடுத்ததால் அணை முழு கொள்ளளவை எட்டியது. நடப்பாண்டும் பருவமழை நன்றாக பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. தொடர் பருவமழை மற்றும் சோலையாறில் இருந்து நீர்வரத்து அதிகரிப்பால், பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் உயர்ந்தது.

மொத்தம் உள்ள, 72 அடியில், நேற்று, 62.48 அடியாக நீர்மட்டம் உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு, 1,401 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு, 60 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

அணை நீர்மட்டம், 62 அடியை எட்டியதால், நீர்வளத்துறை அதிகாரிகள், தமிழக – கேரளா மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கு, முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். மேலும், தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘பரம்பிக்குளம் அணை நீர்மட்டம், 62.48 அடியாக உயர்ந்தது. இதையடுத்து, முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, 67 அடியை எட்டும் போது, இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்,’ என்றனர்.