கோவை; சமூக வலைத்தளங்களில் பி.எப்., பென்ஷன் தொகை உயர்த்தப்படும் என, வெளியிடப்படும் பொய்யான வதந்திகளை ஊழியர்கள் நம்பவேண்டாம் என, பி.எப்., அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பில், பி.எப்., சந்தாதாரர்களாக இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

பல ஊழியர்கள் தங்களது ஓய்வூதியத்தை 1,000 ரூபாயில் இருந்து, 9,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில், ஏ.ஐ.டி.யு.சி., சங்கம் சார்பில், கோவை பி.எப்., மண்டல அலுவலகம் முன்பு பென்ஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.சமூக வலைத்தளங்களில், பி.எப்., ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் செய்து, குறைந்தபட்ச ஓய்வூதியமாக, 9000 ரூபாய் மத்திய அரசு உயர்த்தி வழங்க இருப்பதாக, செய்திகள் வெளியிடப்படுகின்றன.
இது குறித்து, கோவை மண்டல பி.எப்., அலுவலகம் தரப்பில் கேட்ட போது, ”சமூக வலைத்தளங்களில், ஓய்வூதிய தொகையை உயர்த்தியதாக தகவல் பரப்பப்படுகிறது.
‘இது முற்றிலும் பொய்யானது. இதை பி.எப்., பென்ஷன் பெறுபவர்கள் யாரும் நம்ப வேண்டாம். இப்படி திட்டம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை’ என்றனர்.‘கோரிக்கைகளை நிறைவேற்றணும்’
ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலாளர் தங்கவேல் கூறியதாவது:1995ம் ஆண்டு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தின்படி, மாதம் குறைந்தபட்சம், 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. தற்போது உள்ள, கால சூழ்நிலையில் இந்த தொகை மிகவும் குறைவாகும்.அதனால், அகில இந்திய அளவில் அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து, இந்த திட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மாதம், 9000 ரூபாய் பென்ஷன் வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.21 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறும் தனியார் ஊழியர்களுக்கு, இ.எஸ்.ஐ., மருத்துவ வசதி மறுக்கப்படுகிறது. இந்த சீலிங் முறையை ரத்து செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
Leave a Reply