நெரிசலை குறைக்க நான்கு இடங்களில் ‘யூ டர்ன்’, ‘ரவுண்டானா’ அமைக்க திட்டம்

கோவை; மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, மேலும் நான்கு இடங்களில் ‘யூ டர்ன்’ மற்றும் ‘ரவுண்டானா’ அமைக்க, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.கோவை மாநகரில் சிக்னல்களில், வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்காமல் செல்லவும், நெரிசலை குறைக்கவும், சிக்னல்களுக்கு பதிலான ‘யூ டர்ன்’ மற்றும் ‘ரவுண்டானா’ அமைக்கப்பட்டன.

அதன் பிறகு பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. ஒரு சில இடங்களில் ‘யூ டர்ன்’ வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுத்தினாலும், பெரும்பாலான இடத்தில் ‘யூ டர்ன்’ ‘ரவுண்டானாக்கள்’ பயனுள்ளதாக உள்ளன.

தற்போது மாநகர பகுதிகளில், அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை என பல்வேறு இடங்களில் மொத்தம், 28 ‘யூ டர்ன்கள்’, மற்றும் 14 ‘ரவுண்டானாக்கள்’ அமைக்கப்பட்டுள்ளன.
அடுத்தபடியாக சுந்தராபுரம், சரவணம்பட்டி, பால் கம்பெனி மற்றும் இடையர்பாளையம் ஆகிய நான்கு இடங்களில் ‘யூ டர்ன்’ மற்றும் ‘ரவுண்டானா’ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

துடியலுார் – சரவணம்பட்டி சந்திப்பு, சுந்தராபுரம் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதைக் குறைக்க அப்பகுதிகளில் ரவுண்டானாவுடன் கூடிய யூ டர்ன்கள் மற்றும் ‘ஒன் வே’ உள்ளிட்டவை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்விரு இடங்களில், சாலை மாற்றம் செய்யப்பட்டு, ரவுண்டானா அமைக்கப்பட்டால் அப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் குறையும்; வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டாம்.

இதே போல், பால் கம்பெனி மற்றும் இடையர்பாளையம் பகுதியில் ‘யூ டர்ன்’ அமைத்து விட்டால் அங்கும் நெரிசல் குறையும் என, போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.