கோவை; மாநகர பகுதிகளில் குற்றச்செயல்களை குறைக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை மாநகர பகுதிகளில் அதிகரித்து வந்த அடிதடி, கொள்ளை, கொலை, திருட்டு, போதை பொருள் விற்பனை போன்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்த மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

மாநகர பகுதிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ‘பீட் ஆபிசர்ஸ்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. போதை பொருட்கள் விற்பனையை குறைக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. ‘போலீஸ் புரோ’ திட்டம் வாயிலாக கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தொடர் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளால் மாநகர பகுதிகளில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு, கொலை, கொள்ளை, திருட்டு, அடிதடி, போக்சோ, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் 749 பெண்கள் உட்பட, மொத்தம் 10,245 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தாண்டு மே மாதம் வரை, 352 பெண்கள் உட்பட 3347 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல், போதைப்பொருட்கள் தொடர்பாக கடந்த ஜனவரி முதல் ஜூன் 15ம் தேதி வரை 134 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 264 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில், 168 கிலோ கஞ்சா, 11 ஆயிரம் போதை மாத்திரைகள், 504 கிராம் மெத்தபெட்டமைன், 92 கிராம் கொக்கைன், ரூ. 28 லட்சம் பணம், 32 இருசக்கர வாகனங்கள், 9 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதில், சைபர் கிரைம் தொடர்பாக ஏழு பேர், பாலியல் வழக்கில் 13 பேர், சட்டம் ஒழுங்கு தொடர்பாக வழக்குகளில் 43 பேர், அபகரிப்பு தொடர்பாக ஐந்து பேர், போதை பொருட்கள் தொடர்பாக 32 பேர் என கடந்த ஜூன் 15ம் தேதி வரை 100 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது மட்டுமின்றி, மாநகர பகுதிகளில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் செயல்பட்டு வந்த 140 பேர் சென்னை சிட்டி போலீஸ் சட்டம் 51 ஏ பிரிவின் கீழ் ஆறு மாதங்களுக்கு மாநகரை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
இதனால், கடந்தாண்டை விட இந்த ஆண்டு குற்றங்கள் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
Leave a Reply