புதுடில்லி: உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற சென்றுள்ள எம்.பி.க்கள் குழுவை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகளை உலக நாடுகளுக்கு எடுத்துக் கூறும் வண்ணம் இந்திய எம்.பி.,க்கள் குழு 33 நாடுகளுக்குச் சென்றுள்ளது. இந்த எம்.பி.,க்கள் குழுவில் பல்வேறு முக்கிய கட்சிகளின் எம்.பி.,க்கள் இடம் பெற்றுள்ளனர்.
சம்பந்தப்பட்ட உலக நாடுகளுக்குச் செல்லும் எம்.பி.,க்கள் குழுவினர், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு, பஹல்காம் தாக்குதல் மற்றும் அதன் பின்னர் பயங்கரவாத நிலைகளை அழித்தது குறித்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை விளக்கி பேசி வருகின்றனர். இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பல உலக நாடுகள் ஆதரவும் தெரிவித்துள்ளன.
பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள இந்திய எம்.பி.,க்கள் குழுவை பிரதமர் மோடி சந்தித்து கலந்துரையாட உள்ளார். ஜூன் 9 அல்லது 10ம் தேதியில் இந்த சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது. அப்போது பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்கு உலக நாடுகள் அளித்த ஆதரவுகள், அவர்களின் கருத்துகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் ஜூன் 4ம் தேதி நடக்க உள்ளது, குறிப்பிடத்தக்கது.
Leave a Reply