‘லீவு’ முடிஞ்சு பள்ளி திறந்தாச்சு; மாணவர்கள் உற்சாகம்; இனிப்பு, பூங்கொத்து வழங்கி வரவேற்ற ஆசிரியர்கள்

கோடை விடுமுறை முடிந்து, நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, பொள்ளாச்சி பகுதியில் உள்ள பள்ளிகளில், மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

* பொள்ளாச்சி மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், புதியதாக வந்த மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். மாணவியர் உற்சாகமாக பாட புத்தகங்களுடன் பள்ளிக்கு வந்தனர்.

* பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில், நடப்பு ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்தது. புதியதாக பள்ளியில் சேர்ந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை மேள தாளங்களுடன் வரவேற்றனர்.
Latest Tamil News

பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை புதியதாக சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் மாலை அணிவித்தும், இனிப்பு வழங்கியும், வண்ண பலுான்களை குழந்தைகளுக்கு கொடுத்தனர். தொப்பி அணிவித்து பறை இசை முழங்க ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இருந்து, உயர்நிலைப்பள்ளிக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

உயர்நிலைப்பள்ளிக்கு வந்தவர்களை வரவேற்கும் விதமாக மாணவர்கள், பள்ளியின் நுழைவாயில் இருந்து பள்ளி வரை வரிசையாக நின்று கை தட்டி வரவேற்றனர்.

*கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு மலர் கொடுத்து பலுான், இனிப்பு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.பள்ளி மேலாண்மை குழு தலைவர் ேஷாபனா தலைமை வகித்தார். பள்ளியின் கொடையாளர் உமா, மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார். இதற்கான ஏற்பாட்டினை பள்ளி தலைமையாசிரியர் தினகரன், ஆசிரியர் சத்தியா ஆகியோர் செய்து இருந்தனர்.

* புளியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களை வரவேற்று, அவர்களுக்கு பாட புத்தகங்களை வழங்கினர்.

* தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் கணேசன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வரவேற்பு அளித்தனர். புதியதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு கிரீடம் அணிவித்து பூ கொடுத்து வரவேற்றனர். மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டது. அரசின் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அய்யம்மாள், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மாரியம்மாள் ஆகியோர் பங்கேற்றனர்.

வால்பாறை

* வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், நடந்த விழாவிற்கு தலைமை ஆசிரியர் சிவன்ராஜ், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொன்னான் வரவேற்றார்.

விழாவில்,பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற காரணமான ஆசிரியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்களை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி வழங்கினார். நகராட்சி துணைத்தலைவர் செந்தில்குமார், கவுன்சிலர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

* வால்பாறை மலைப்பகுதியில், 53 ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிகள், 18 அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளிகள், 14 நடுநிலைப்பள்ளிகள் உட்பட மொத்தம், 85 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளில் பாட புத்தகம் வழங்கப்பட்டது.

கிணத்துக்கடவு

* கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களை வரவேற்று இனிப்பு வழங்கப்பட்டது. அதன்பின், புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. கோவை கலால் மேற்பார்வையாளர் சிவகுமாரி, எம்.எல்.ஏ., தாமோதரன், பேரூராட்சி தலைவர் கதிர்வேல், பி.டி.ஏ., தலைவர் கனகராஜ், தலைமை ஆசிரியர் தேன்மொழி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பாட புத்தகம், நோட்டுகள், பேக், சீருடை உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

*மெட்டுவாவி நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் மயிலாத்தாள், ஆசிரியர்கள், எஸ்.எம்.சி., உறுப்பினர்கள் இணைந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை வரவேற்றனர். மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் குறிப்பேடுகள் வழங்கப்பட்டது.

*நல்லட்டிப்பாளையம் நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு இனிப்பு, பலூன், பென்சில்கள், பாடநூல்கள் வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் செல்வராணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் பவித்ரா, பி.டி.ஏ., தலைவர் பெருமாள்சாமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

உடுமலை

* உடுமலை, ஆண்டியகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்கப்பட்டன. தலைமையாசிரியர் தங்கவேல் மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்களை வழங்கினார்.

* சின்னவீரம்பட்டி நடுநிலைப்பள்ளியில், மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வரவேற்பு வழங்கப்பட்டது. கே.ஜி., வகுப்பில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பலுான் மற்றும் இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

மேலும், நடப்பாண்டில் கடந்தாண்டை விடவும் கூடுதலாக மாணவர் சேர்க்கை உள்ளதால் பள்ளி மேலாண்மைக்குழுவினர், முன்னாள் மாணவர் சங்கத்தினர் மகிழ்ச்சியுடன் புதிய கல்வியாண்டை கொண்டாடினர். பள்ளி தலைமையாசிரியர் இன்பகனி வரவேற்றார்.

* ராகல்பாவி துவக்கப்பள்ளியில், மாணவர்களுக்கு முதல் பருவத்துக்கான பாடபுத்தகங்கள், நோட்டுகள் மற்றும் தலா ஒரு செட் சீருடை வழங்கப்பட்டன.தலைமையாசிரியர் தாரணி மாணவர்களுக்கு நலத்திட்ட பொருட்களை வழங்கினார்.

முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதி கோபாலகிருஷ்ணன் மாணவர்களுக்கு வாழ்த்து கூறி வரவேற்றார். ஆசிரியர் கண்ணபிரான் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். அனைவரும் ஒற்றுமை உறுதிமொழி எடுத்தனர்.