அரசு மருத்துவக் கல்லுாரியில் அரசு பள்ளி மாணவிக்கு ‘சீட்’

கோவை; கோவை, ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற மாணவி தேசிகா, இந்தாண்டு நடைபெற்ற ‘நீட்’ தேர்வில் 540 மதிப்பெண் பெற்று, திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்வதற்குத் தேர்வாகியுள்ளார்.மாநில அரசு பள்ளிகளில் இருந்து, 498 மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதினர். இவர்களில், 78 பேர் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற்றனர். அதில், தேசிகா 540 மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லுாரியில் இடம் பிடித்துள்ளார். தேசிகாவின் சாதனையை பாராட்டி, ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.தேசிகா கூறுகையில், ”நீட் தேர்வில் இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றேன். கவனம் சிதறாமல், தொடர்ந்து இத்தேர்வுக்காக மட்டும் தயாரானேன். தொடர் பயிற்சியும், கவனத்துடன் படித்தால் அரசு பள்ளி மாணவர்களும் எளிதில் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறலாம்,” என்றார்.

இந்தாண்டு அரசு பள்ளிகளில் பயின்ற 8 மாணவர்கள், 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்புக்கு தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.