கோவை; மாநகராட்சி குறைதீர் கூட்டம் ‘கான்பிரன்ஸ் ஹாலுக்கு’ மாற்றப்பட்டதால், படி ஏற முடியாமல் சிரமப்படும் மூத்த குடிமக்கள், மக்கள் பிரதிநிதிகள்,அதிகாரிகள் ஏ.சி.,யில் அமர்ந்து கொண்டு தங்களை காக்க வைப்பதாக குமுறுகின்றனர்.மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய் தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டம், கடந்த ஏப்., வரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடந்தது.

மக்கள் அமர்ந்திருக்க ஏதுவாக கூடாரம் அமைக்கப்பட்டு, மேயர், கமிஷனர் இருக்கைகள் எதிரே துறை சார்ந்த அதிகாரிகள் அமர வைக்கப்பட்டிருந்தனர்.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் சுமார், 10 அடி நடந்து சென்றாலே,மனுக்கள்அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஏப்., 29ம் தேதி நடந்த குறைதீர் கூட்டத்தில், மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி மேயர், கமிஷனரிடம்மக்கள் கொந்தளித்ததால், பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, நடந்த குறைதீர் கூட்டங்கள் துணை கமிஷனர் அலுவலகம் அருகே, கான்பிரன்ஸ் ஹாலுக்கு மாற்றப்பட்டது.
தற்போது வரை, முதல் மாடியில் நடக்கும் இக்கூட்டத்துக்கு அதிகபட்சம் மூவர் மட்டுமே செல்ல போலீசார் அனுமதிக்கின்றனர். மனுதாரர்களில், 80 சதவீதம் பேர் மூத்த குடிமக்களாகஉள்ளனர்;மாற்றுத்திறனாளிகளும் வருகின்றனர்.
அருகே ‘லிப்ட்’ வாயிலாக மேலே சென்றாலும்,சக்கர நாற்காலியில் அமர்ந்து வருபவர்கள்சிரமப்படுகின்றனர்.
அப்படியே சென்றாலும், மேலே கான்பிரன்ஸ் ஹாலுக்குள் செல்வதும் சிரமம். மேயர், அதிகாரிகள் வெளியே வந்துதான் மனு வாங்குகின்றனர்.மூத்த குடிமக்களோ, முதல் மாடிக்கு மூச்சு வாங்கிக்கொண்டு ஏறுகின்றனர். மாற்றுத்திறனாளிகள் அனுபவிக்கும் சிரமம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
எங்களுக்கு துாசி!
பொது மக்கள் கூறியதாவது:பல முறை மனுஅளித்தும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நாங்கள் ஓட்டுப்போட்டு தேர்வு செய்த மேயர் உள்ளிட்டோரிடம் கேள்வி கேட்கத்தான் செய்வோம்.இதற்காக மனுக்கள் பெறும் இடத்தையே மாற்றி, எங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கின்றனர்.இதனால் பெரியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் சிரமப்படுகின்றனர். படி ஏறும்போது கால் இடறிஏதேனும் நடந்தால் யார் பொறுப்பு ஏற்பது? மேலே, அவர்கள் ஏ.சி.,யில் அமர்ந்துள்ளனர்; நாங்கள் கீழே மழையிலும், வெயிலிலும், துாசியிலும் காத்திருக்கிறோம். எங்களுக்கு சிரமம் இன்றி வளாகத்திலேயே கூட்டம் நடத்தவேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Leave a Reply