புறநகரில் 24 மணி நேரமும் ரோந்து செல்லும் ‘ஸ்மார்ட் காக்கீஸ்’

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் ஸ்மார்ட் காக்கீஸ் என சொல்லக்கூடிய போலீசார் 24 மணி நேரமும் ரோந்து சென்று வருகின்றனர்.கோவை புறநகர் பகுதிகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையில் ‘ஸ்மார்ட் காக்கீஸ்’ திட்டத்தை ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் துவங்கி வைத்தார். அதன்படி, மேட்டுப்பாளையம் உட்கோட்டத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை மற்றும் அன்னூர் போலீஸ் ஸ்டேஷன்களில் மொத்தம் 6 ரோந்து நவீன பைக்குகளில், 12 போலீசார் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., அதியமான் கூறியதாவது:-
உடனடியாக களத்திற்கு சென்று குற்றங்களை தடுப்பதற்கும், பொதுமக்கள் 100 அல்லது போலீஸ் ஸ்டேஷன் எண்களுக்கு அழைத்து தகவல் கூறினால், அங்கேயும் விரைவாக செல்வதற்காகவும் ஸ்மார்ட் காக்கீஸ் தயாராக உள்ளனர். ஒரு ரோந்து பைக்கிற்கு 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ரோந்தில் இருப்பார்கள்.

இந்த பைக்குகளில் ஜி.பி.எஸ்., பொருத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசாரின் உடையில் பாடி கேமரா, நவீன மைக், வயர்லெஸ் மற்றும் மதுபோதையில் ஒருவரை பரிசோதிக்கும் பிரெத் அனலைசர் உள்ளிட்டவைகளும் இருக்கும். இது தவிர பழைய குற்றவாளிகளின் முகங்களை கண்டறியும் எப்.ஆர்., செயலி மற்றும் வாகன ஆவணங்களை ஆய்வு செய்ய பரிவாகன் செயலிகளும் இந்த போலீசார் வைத்திருப்பார்கள்.

பெண்கள் காவலன் செயலியை பயன்படுத்தும் போது, ஸ்டேஷன் போலீசாருக்கு அலர்ட் வரும், இவர்களுக்கும் அலர்ட் வரும். உடனடியாக களத்கிற்கு சென்று குற்றங்கள் தடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.