கோவை: தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள்,கோடை விடுமுறைக்குப் பின் நேற்று திறக்கப்பட்டன.
2025 – 2026 கல்வியாண்டில் மாணவர்களை வரவேற்க, அனைத்து பள்ளிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஒண்டிப்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பள்ளிகள், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மாநகராட்சி பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு பூச்செண்டு, இனிப்பு, மரக்கன்றுகள், பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. டிரம்ஸ் இசையுடன் மாலை அணிவித்து, கைதட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது.
கவுண்டம்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், அனைத்து மாணவர்களுக்கும் மஞ்சள் பைகள் வழங்கப்பட்டன.
பாடப்புத்தகங்கள், நோட்டுப்பதிவேடுகள், சீருடைகள், வண்ணப்புத்தகங்கள், பென்சில் பாக்ஸ், திருக்குறள் புத்தகம், வாய்ப்பாடுகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள், இலவசமாக வழங்கப்பட்டன.
பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் மாணவ, மாணவிகள் கும்மிப் பாடல்களுக்கு, நடனமாடி வரவேற்பளித்தனர்.
டாடாபாத் நடுநிலைப்பள்ளியில் இனிப்புகள் வழங்கப்பட்டன. பி.என்.புதூர், ரத்தினபுரி மாநகராட்சி ஆரம்பப்பள்ளிகளில், பலூன்கள், கார்ட்டூன் பொம்மைகளுடன் வரவேற்பு வழங்கப்பட்டது.
தனியார் பள்ளிகளிலும், பரதநாட்டியம், பாண்டு வாத்தியத்துடன் இனிப்பு வழங்கி, வரவேற்பு நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெற்றன. மிக்கி மவுஸ் போன்ற கார்ட்டூன் உடை அணிந்தும், வரவேற்பு வழங்கப்பட்டது.
புதிய கல்வியாண்டு உற்சாகத்துடன் தொடங்கியதைப் போலவே, மாணவர்கள் கல்வி பயணத்தில் சிறக்க, தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் வாழ்த்தினர்.
Leave a Reply