ஆசிரியர் பற்றாக்குறை! மெல்ல கற்கும் மாணவர்களுக்கு தனி கவனம் செலுத்த தடங்கல்

கோவை; அரசுப் பள்ளிகளில், மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த, அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தாலும், அதை செயல்படுத்துவதில் பல சவால்கள் உள்ளன. ஆசிரியர்களை போதுமான எண்ணிக்கையில், நியமித்தால் மெல்ல கற்கும் குழந்தைகளையும், நன்கு படிக்கும் செல்லக்குழந்தையாக மாற்றி விடலாம் என்கின்றனர் ஆசிரியர்கள்.மாநில அளவிலான மதிப்பீடு(ஸ்லாஸ்) முடிவுகளின் அடிப்படையில், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, ‘திறன்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள், ‘போக்கஸ்டு லேர்னர்ஸ்’ என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களின் அடிப்படை திறன்களை மேம்படுத்த, சிறப்பு வகுப்புகள் நடத்துவதோடு, இவர்களின் கற்றல் முன்னேற்றம் குறித்த விவரங்கள், ‘எமிஸ்’ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். அதன்படி, கோவை மாவட்டத்தில் 6 முதல் 9ம் வகுப்பு வரை சுமார் 7,112 மெல்லக் கற்கும் மாணவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். 9ம் வகுப்பை ஒப்பிடுகையில், 6 – 7ம் வகுப்பில் மாணவர்கள் அதிகம்.

இதுதவிர, தொடக்கப்பள்ளிகளிலும் மெல்லக் கற்கும் மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தொடக்கப் பள்ளிகளில் இந்த எண்ணிக்கை, மூன்று மடங்கு அதிகம் என்கின்றனர் அதிகாரிகள். இந்த மாணவர்களுக்காக, ஒவ்வொரு பாடத்திற்கும் 90 நிமிட தனி வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், ஆசிரியர் பற்றாக்குறையால் பெரும்பாலான பள்ளிகளில் இது நடைமுறையில் இல்லை.மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

சில பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களை ஒன்றாக இணைத்து வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வகுப்பறைகளை ஒதுக்குவதிலும் பிரச்னை உள்ளது.

இதன் காரணமாக, சிறப்பு கவனம் தேவைப்படும், ‘போக்கஸ்டு’ மாணவர்கள் ரெகுலர் மாணவர்களுடன் ஒரே வகுப்பில் கற்பிக்கப்படுவதால், அவர்கள் முழுமையாக கற்கும் வாய்ப்பு குறைகிறது. கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பதே, இந்த சிக்கலுக்கு தீர்வு.

பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் மாவட்டத்தில் தமிழ் 17, கணிதம் 10, அறிவியல் 15, சமூக அறிவியல் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதை தவிர, பதவி உயர்வின் வாயிலாகவும் பணியிடங்கள் காலியாகும். பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தினால், இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்கின்றனர் ஆசிரியர் சங்கத்தினர்.

ஆசிரியர்களுக்கு சவால்கள்

ஆசிரியர்களுக்கு இரண்டு பாடவேளைகள் சுழற்சி முறையில் ஒதுக்கப்பட்டாலும், மூன்று ஆசிரியர்களுடன் செயல்படும் பள்ளிகளிலும், 9 மற்றும் 10ம் வகுப்புகளில், அதிக மாணவர்கள் உள்ள பள்ளிகளிலும் ஆசிரியர்களை ஒதுக்குவது கடினமாக உள்ளது. ஒருபுறம் சிறப்பு மாணவர்களையும், மறுபுறம் ரெகுலர் மாணவர்களையும் கவனிக்க வேண்டி உள்ளது. வாராந்திர தேர்விற்கான வினாத்தாள்கள், ‘எமிஸ்’ தளத்தில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டாலும், ஆசிரியர்களே வினாத்தாள்களைத் தயாரிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இப்பிரச்னைகளுக்குத் தீர்வு காண, பள்ளிகளில் ஆசிரியர்களை போதுமான எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும் என்கின்றனர் கல்வியாளர்கள்.