வேட்டைத் தடுப்பு காவலர் எண்ணிக்கையை அதிகரிக்கணும்! மனித-வனவிலங்கு முரண்பாடுகளை தவிர்க்க

கோவை; கோவையில், மனித-வனவிலங்கு முரண்பாடுகளைக் குறைக்க, பாதியாய் குறைந்துவிட்ட வேட்டைத் தடுப்புக் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தமிழக வனத்துறையில், களக்காடு-முண்டந்துறை, விருதுநகர்-மேகமலை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய புலிகள் காப்பகங்கள், காப்புக் காடுகள், வனவிலங்கு சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் ஆகியவற்றில் நூற்றுக்கணக்கான வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணிபுரிகின்றனர்.

சட்ட விரோத வேட்டையைத் தடுத்தல், வனம் மற்றும் வன உயிரின பாதுகாப்புப் பணியில் இந்த வேட்டைத் தடுப்புக் காவலர்கள் ஈடுபடுகின்றனர். பெரும்பாலும், பழங்குடியின, மலைவாழ் மக்கள் வேட்டைத் தடுப்புக் காவலர்களாக இருந்தாலும், ஊரக, நகரப்பகுதியைச் சேர்ந்தவர்களும் பணிபுரிகின்றனர்.

கோவை வனக் கோட்டத்தில், கோவை, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், போளுவாம்பட்டி, சிறுமுகை, காரமடை, மேட்டுப்பாளையம் என 7 வனச்சரகங்கள் உள்ளன. இவற்றில் 150க்கும் மேற்பட்ட வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணிபுரிந்த நிலையில், தற்போது சுமார் 60 பேர்தான் பணிபுரிகின்றனர்.உதாரணமாக, பெ.நா.பாளையத்தில், 24 பேர் பணிபுரிந்த இடத்தில், 10 பேர் தான் உள்ளனர். வனக்காவலர்களாக பதவி உயர்வு, பணி ஓய்வு, இறப்பு, பணியில் இருந்து விலகல் போன்ற காரணங்களால், சுமார் 100 காலி இடங்கள் உருவாகி விட்டன. இப்பணியிடங்களை நிரப்பாததால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வேட்டைத்தடுப்புக் காவலர்கள் மீது, கடும் பணிச்சுமை விழுகிறது. எனவே, வேட்டைத் தடுப்புக் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதுதொடர்பாக வேட்டைத் தடுப்புக் காவலர்கள் கூறியதாவது:

கோவை கோட்ட வனப்பகுதி வாளையாறு முதல் சிறுமுகை வரை 350 கி.மீ., நீளம் கொண்டது. இங்கு யானை-மனித முரண்பாடுகள் மிக அதிகம். யானைகளை விரட்டுவதே பெரும் பணி. பரப்பரளவு மிகப் பெரிது என்பதால், ஒன்றுக்கு மேற்பட்ட குடியிருப்பு அல்லது வேளாண் தோட்டங்களில் யானைகள் நுழைந்தால், வெறும் 2 வேட்டைத் தடுப்புக் காவலர்களும், ஏதேனும் ஒரு வனத்துறை அலுவலரும் மட்டும் சென்று யானையை எப்படி விரட்ட முடியும். நகரப் பகுதிக்குள் மயில் உட்பட ஏதேனும் வன உயிரினம் அடிபட்டால் நாங்கள் தான் அங்கும் செல்ல வேண்டி உள்ளது.

கடந்த 2018 டிச., 31ம் தேதிக்குப் பிறகு இப்பணியில் சேர்ந்தவர்கள் யாரும் தற்போது தொடரவில்லை. ஊதியமும் குறைவு. இந்த வேலையை மிகவும் நேசிப்பவர்கள் மட்டுமே தொடர்கிறோம். மனித–வனவிலங்கு முரண்பாடுகளைத் தவிர்க்கவும், இந்த மோதலால் ஏற்படும் இருதரப்பு உயிரிழப்புகளைத் தவிர்க்கவும் கூடுதலாக வேட்டைத் தடுப்புக் காவலர்களை நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.