வால்பாறை; வால்பாறை அருகே, அதிரப்பள்ளி ரோட்டில் பகல் நேரத்தில் புலியை கண்ட சுற்றுலா பயணியர் பீதியடைந்தனர்.கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடி – வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி, சார்பா உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகள் உள்ளன. வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் சாலக்குடி ரோட்டில் உள்ள நீர்வீழ்ச்சிகளுக்கு செல்கின்றனர்.

அதிரப்பள்ளி செல்லும் ரோட்டில், யானை, காட்டுமாடு, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகளவில் பகல் நேரத்தில் உலா வருகின்றன. இந்நிலையில், பகல் நேரத்தில் புலி ரோட்டை கடந்து சென்றது. இதை கண்ட சுற்றுலா பயணியர் வீடியோ எடுத்துள்ளனர். அதிரப்பள்ளி ரோட்டில் புலி நடமாட்டத்தால் சுற்றுலா பயணியர் பீதியடைந்துள்ளனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையிலிருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி வரையான ரோட்டில், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், மாலை, 6:00 மணிக்கு மேல் மளுக்கப்பாறை வனத்துறை சோதனைச்சாவடி வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, அதிரப்பள்ளி ரோட்டில் புலி நடமாட்டமும் உள்ளதால், சுற்றுலா பயணியர் இருசக்கர வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். பிற வாகனங்களில் வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யாமலும், ரோட்டில் நிறுத்தி புகைப்படம் எடுக்காமலும் கவனமாக செல்ல வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
Leave a Reply