உயிரிழப்பை தடுக்க… புறநகரில் வேண்டும் அரசு மருத்துவமனை; விபத்தை தவிர்க்க நடவடிக்கை அவசியம்

சூலுார்; புறநகர் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை துவக்க வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையான அவிநாசி ரோடு, செங்கப் பள்ளி முதல் நீலம்பூர் வரை ஆறுவழிச்சாலையாக உள்ளது. நீலம்பூரில் இருந்து வாளையாறு வரை இருவழி சாலையாக உள்ளது.அதேபோல், தேசிய நெடுஞ்சாலையான திருச்சி ரோடு, கரூர் முதல் சூலுார் வழியாக கோவை வரை செல்கிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, பல்லடம், காங்கயம், திருச்சி, பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களை இணைக்கும் முக்கிய ரோடுகளாக இவை உள்ளன.

இந்த ரோடுகளில், கோவை, பாலக்காடு நோக்கி, தினமும் பல ஆயிரம் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல், கோவையில் இருந்து வெளி மாநிலம், மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் இந்த ரோடுகளில் பயணிக்கின்றன. அதற்கேற்ப அனுதினமும் விபத்துகளும் தொடர்ந்து நடக்கின்றன.

அவிநாசி ரோட்டில் கருமத்தம்பட்டி – சென்னியாண்டவர் கோவில் இடையிலும், நீலம்பூர் பை – பாஸ் ரோட்டில் பட்டணம் பிரிவு, வெள்ளலுார் பிரிவு உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. கடந்த சில மாதங்களில் மட்டும் பல விபத்துகள் நடந்து, உயிர் பலிகள் அதிகரித்துள்ளன.இரவில் பயணிக்கும் கார், லாரி, இரு சக்கர வாகனங்கள், முன்னே செல்லும் வாகனங்களை முந்த முயலும் போது, எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன.விபத்தில் சிக்குவோர் பலரும் மீட்கப்பட்டவுடன் தனியார் மருத்துவமனைகளுக்கே கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அவர்கள், பொருளாதார நெருக்கடியால் மீண்டும் அரசு மருத்துவமனைக்கே சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ரோடுகளில் இயக்கப்படுகின்றன. அதன் காரணமாக விபத்துகளும் அதிகரித்துள்ளன. விபத்தில் சிக்குவோருக்கு முதல் தேவை முதலுதவி சிகிச்சை.

ஆனால், பலருக்கும் அது கிடைப்பதில்லை. அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்றால், 20 கி.மீ., தூரம் செல்ல வேண்டும். கோவை நகரில் இருக்கும் வாகன நெரிசலில் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்குக்குள், பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. அதனால், திருச்சிரோடு, அவிநாசி ரோடு , நீலம்பூர் பை – பாஸ் ரோடுகளை ஒட்டி, ஒரு இடத்தை தேர்வு செய்து, அவசர சிகிச்சை முதல் அனைத்து வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனையை துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான், உயிரிழப்புகளை தடுக்க முடியும். மேலும், விபத்துகளுக்கான காரணங்களை கண்டறிந்து தடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.