வால்பாறை; வால்பாறையில், தொல்குடி திட்ட முகாம் குறித்து, முன்கூட்டியே தகவல் கொடுக்காததாலும், செட்டில்மென்ட் பகுதியில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தாததாலும், சிறப்பு முகாமை பழங்குடியின மக்கள் புறக்கணித்தனர்.மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்டங்களை, பழங்குடியினர் தடையின்றி பெறுவதற்காக, தொல்குடி திட்ட சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
கோவை மாவட்டம், வால்பாறையில் காடம்பாறை, வெள்ளிமுடி, கருமுட்டி, கீழ்பூனாஞ்சி, சங்கரன்குடி, கவர்க்கல், கல்லார், பரமன்கடவு, பாலகணாறு, சின்கோனா உள்ளிட்ட, 12 செட்டில்மென்ட்கள் உள்ளன.

இதில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், மத்திய அரசின் தொல்குடி திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில், கடந்த, 23ம் தேதி துவங்கி, நேற்று வரை சிறப்பு முகாம் நடந்தது.
தாசில்தார் மோகன்பாபு தலைமையில் நடந்த முகாமில், விரல்விட்டு எண்ணும் அளவிலேயே பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர். முகாமில், 50 பேர் மட்டுமே மனுக்களை வழங்கினர்.பழங்குடியின மக்கள் கூறியதாவது:
செட்டில்மென்ட் மக்களின் பிரச்னைகள் குறித்து, கடந்த மாதம் அதிகாரிகள் நேரில் கேட்டறிந்தனர். குறைகளை பல முறை அதிகாரிகளிடம் நேரிலும், மனுக்கள் வாயிலாகவும் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
செட்டில்மென்ட் பகுதியில் ரோடு, குடியிருப்பு, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.
மேலும், சிறப்பு முகாம் நடப்பது குறித்து முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. இதனால் சிறப்பு முகாமில் பங்கேற்ற ஆர்வம் காட்டவில்லை.
இவ்வாறு, கூறினர். அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘கனமழை பெய்வதால் பழங்குடியின மக்கள் முகாமுக்கு எதிர்பார்த்த அளவில் வரவில்லை.
தற்போது பழங்குடியின மக்களிடம் பெறப்பட்டுள்ள மனுக்களை, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
Leave a Reply