ஆயில் கழிவை குட்டையில் கொட்டிய லாரி சிறைபிடிப்பு

கருமத்தம்பட்டி; கிட்டாம்பாளையத்தில் குட்டையில், ஆயில் கழிவை கொட்டிய லாரி சிறைபிடிக்கப்பட்டது.கருமத்தம்பட்டி அடுத்த கிட்டாம் பாளையத்தில் சுதந்திர வனம் உள்ளது. இங்கு ஊராட்சி சார்பில் மரங்கள் வளர்க்கப்படுகின்றன. அருகில் குட்டையும், ஊராட்சி ஆழ்துளை கிணறும் உள்ளன. இக்குட்டையில் இரவு நேரங்களில் ஆயில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவது கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Latest Tamil News

கழிவு கொட்டுவோரை கண்டுபிடிக்க, இரவு நேரத்தில் இளைஞர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இரு நாட்களுக்கு முன், இரவு, 10:00 மணிக்கு, கழிவு ஆயிலை குட்டையில் கொட்டிய லாரியை சுற்றி வளைத்து சிறைபிடித்தனர். ஊராட்சி முன்னாள் தலைவர் சந்திரசேகர் மற்றும் உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் உள்ளிட்டோருக்கு தகவல் அளித்தனர்.

லாரியை ஊராட்சி அலுவலகத்துக்கு கொண்டு வந்து, ஊராட்சி செயலரிடம் ஒப்படைத்தனர். பி.டி.ஓ., மற்றும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,’குடிநீருக்கு ஆதாரமாக இருக்கும் நீர் நிலைகளில் ஆயில் கழிவு உள்ளிட்ட கழிவுகளை கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.