‘நம்மூர்ல இல்லை கொரோனா; பதற்றம் வேண்டாம்’

கோவை; கோவையில் கொரோனா பாதிப்பு ஏதும், தற்போது வரை பதிவாகவில்லை. பதட்டம் தேவையில்லை என, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி தெரிவித்தார்.இந்தியாவில், கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், மாவட்டங்களில் தயார்நிலையில் இருக்க மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மக்கள் பதட்டம் அடையும் வகையில் எவ்வித தகவல்களையும் வெளியிட வேண்டாம் என, அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை விமான நிலையத்தில், தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை அரசு மருத்துவமனை மற்றும் பிற மருத்துவமனைகளில் அறிகுறிகள் இருந்தால் மட்டும், பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுகுறித்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறுகையில், ” கொரோனா குறித்து எவ்வித அறிவுறுத்தல்களும் பெரிதாக வரவில்லை. கோவையில் அச்சம் கொள்ளும் அளவில் பாதிப்புகள் ஏதும் இல்லை. அறிகுறிகள் தீவிரமாக இருப்பவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனைகள் அனைத்திலும் காய்ச்சல் பிரிவு உள்ளன; தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. கொரோனாவும் சாதாரண காய்ச்சல் போன்று தான். அச்சம் கொள்ள வேண்டாம்.

பள்ளிகள் திறந்துள்ள சூழலில், குழந்தைகளை நினைத்து பெற்றோர் பதட்டம் கொள்ள அவசியம் இல்லை,” என்றார்.