சோமனூர்: ஜவுளி உற்பத்தியாளர்களை நேரில் சந்தித்து, கூலி உயர்வை வழங்க விசைத்தறியாளர்கள் வலியுறுத்துவதால்,பிரச்னைக்கு தீர்வு காணும் சூழல் ஏற்பட்டுள்ளது.கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில், புதிய கூலி உயர்வு கேட்டு, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் , கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக, வேலைநிறுத்தம், உண்ணாவிரதம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தினர். அதன் பயனாக கடந்த, ஏப்., 20 கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதன்படி, சோமனூர் ரகத்துக்கு, 15 சதவீதமும், மற்ற ரகங்களுக்கு, 10 சதவீதம் கூலி உயர்வை நடைமுறைப்படுத்த ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டனர். ஏப்., 21 ம்தேதி முதல் அமல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், சோமனூர் தவிர்த்து மற்ற பகுதிகளில் கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த விசைத்தறியாளர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்க தயங்க மாட்டோம், என, அறிவித்தனர். இந்நிலையில், விசைத்தறியாளர்கள் தங்களுக்கு பாவு நூல் தரும் ஜவுளி உற்பத்தியாளர்களை, சங்க நிர்வாகிகளுடன் சென்று நேரில் சந்தித்து, கூலி உயர்வு வழங்க வேண்டும், என, வலியுறுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதன் பயனாக, அவிநாசி, தெக்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள், ஒப்பந்த கூலியை வழங்க முன்வந்துள்ளனர். பல இடங்களில் கூலியை கொடுத்து, பாவு நூல்களையும் கொடுத்து வருவதால், விசைத்தறியாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
இது குறித்து விசைத்தறியாளர்கள் கூறியதாவது:
விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பல நெருக்கடிகளுக்கு இடையில் விசைத்தறிகளை இயக்கி வருகிறோம் என்பது ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு தெரியும். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்த படி கூலி உயர்வை கொடுத்து வந்திருந்தால் அவர்களுக்கும் சுமை இருக்காது. கூலி குறைத்து வழங்கி வந்ததால், தற்போது, உயர்த்தி கொடுக்க அவர்கள் தயங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறிகிறோம். எங்களுடைய நியாயமான கோரிக்கையை அவர்களிடத்தில் விளக்கி, கூலி உயர்வை வழங்க கோரிக்கை விடுத்து வருகிறோம். அவர்களும் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு கூலியை உயர்த்தி தர சம்மதித்துள்ளனர். பல்லடம் தவிர மற்ற பகுதிகளில் கூலியை உயர்த்தி வழங்க துவங்கி உள்ளனர். அப்பகுதியில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்களை சந்தித்து கூலி உயர்வை வலியுறுத்த உள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
விசைத்தறி கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், ‘தொடர்ந்து ஜவுளி உற்பத்தியாளர்களை சந்தித்து கூலி உயர்வை கேட்க உள்ளோம். தர மறுப்பவர்களிடம் பாவு நூல் எடுப்பதில்லை, என, முடிவு செய்துள்ளோம்,’ என்றனர்.
Leave a Reply