கோவை: ஐகோர்ட் உத்தரவை மீறி, கோவையில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில், உயர்ந்த கட்டடங்களின் மேற்பரப்பில், சட்ட விரோதமாக விளம்பர பலகைகள் வைப்பது அதிகரித்து வருகிறது. அவற்றை அகற்றாமல், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் வேடிக்கை பார்க்கின்றன. விளம்பர பலகைகளால் உயிர் பலி ஏற்பட்டால், இவ்விரு அரசு துறைகளுமே தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகிலோ மற்றும் சாலை சந்திப்புகளிலோ, வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் விளம்பர பலகைகள் வைக்கக் கூடாது என, ஐகோர்ட் பலமுறை அறிவுறுத்தியிருக்கிறது. விளம்பரங்களில் உள்ள படங்கள் மற்றும் வாசகங்கள் கவனத்தை சிதறடித்து வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை தவிர்க்கவே, இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
கோவை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு உட்பட்ட பகுதிகளில், உயர்ந்த கட்டடங்களின் மொட்டை மாடியில், மெகா சைஸ் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவை வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கின்றன. இதுபோன்ற விதிமீறல் விளம்பர பலகைகளை அகற்ற, முந்தைய கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்ட போது, அனைத்து இடங்களிலும் அகற்றப்பட்டன.

சப்பைக்கட்டு
கலெக்டர் மாற்றப்பட்டதும் மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். விளம்பர பலகைகள் வைக்கும் ஏஜன்சியினருடன் ரகசிய உறவு வைத்துக் கொண்டு, விபத்து ஏற்படக் கூடிய இடங்களில் வைப்பதற்கும் அனுமதி கொடுக்கின்றனர். நகரமைப்பு பிரிவினரிடம் கேட்டால், ‘உள்ளாட்சி விதிகளின் படியே அனுமதி வழங்குகிறோம்’ என, சப்பைக்கட்டு காரணம் கூறுகின்றனர்.
தற்போதைய மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், விளம்பர பலகைகளை அகற்றும்போது, இரும்பு சட்டங்களையும் அறுத்தெடுக்க அறிவுறுத்தியிருக்கிறார். அவரது உத்தரவை மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் குமார் தலைமையிலான அலுவலர்கள் கண்டுகொள்வதில்லை.
ஐகோர்ட் உத்தரவு மீறல்
பெயரளவுக்கு சில இடங்களில் இரும்பு சட்டங்களை அகற்றி விட்டு, மற்ற இடங்களில் அகற்றவில்லை. அதனால், ஒரு மாத இடைவெளியில் மீண்டும் அதே இடங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன.ஐகோர்ட் உத்தரவு அப்பட்டமாக மீறல், சட்ட விரோதம் என்று தெரிந்தே விளம்பர பலகைகள் வைக்க, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அனுமதிக்கின்றனர். மாவட்ட நிர்வாகமும் கண்டிப்பதில்லை. இதன் காரணமாக, நகரெங்கும் விளம்பர பலகைகள் மீண்டும் உருவெடுத்திருக்கின்றன.
அனுமதியற்ற விளம்பர பலகைகள் சிலவற்றை ஏப்., மாதம் அகற்றினர். அவற்றில் சில இடங்களில், மீண்டும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. மாநகராட்சி அனுமதி பெற்ற எண்கள் இல்லாமல் இருக்கும் விளம்பர பலகைகளையும் அகற்றாமல், சட்ட விரோத செயல்களுக்கு உடந்தையாக இருக்கின்றனர். விளம்பர பலகைகளால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி, உயிர் பலி ஏற்பட்டால், அத்தகைய இழப்புகளுக்கு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.
”நகர் முழுவதும் மீண்டும் ஒரு முறை நகரமைப்பு பிரிவினர் சுற்றி வந்து, அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்றுவர். ஏற்கனவே எடுத்த இடத்தில் வைக்கப்பட்டு இருந்தால், கட்டட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
– சிவகுரு பிரபாகரன்,
மாநகராட்சி கமிஷனர், கோவை
‘அனுமதியற்ற விளம்பர பலகைகளை அகற்றாமல், நகரமைப்பு பிரிவினர் துணை போகிறார்களா அல்லது அகற்ற மாட்டார்கள் என்று தெரிந்தே நகர் முழுவதும் மீண்டும் வைக்கப்பட்டு வருகின்றனவா’ என, மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் குமாரிடம் கேட்டதற்கு, ”அனுமதியற்ற விளம்பர பலகைகள் விரைவில் அகற்றப்படும்,” என்றார்.
Leave a Reply