சூலுார்; நீலம்பூரில் புதிய போலீஸ் ஸ்டேஷன் உருவாக்க, இதுவரை அரசாணை வெளியிடப் படாததால், ஸ்டேஷன் துவக்கும் பணி கேள்விக்குறியாகி உள்ளது. கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில், சூலுார், கருமத்தம்பட்டி, சுல்தான்பேட்டை, செட்டிபாளையம், கோவில் பாளையம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இதில், சூலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கட்டுப்பாட்டில், செட்டிப்பாளையம், சுல்தான்பேட்டை ஸ்டேஷன்கள் உள்ளன.சூலுார் ஸ்டேஷன் எல்லைக்குள், பள்ளபாளையம், கண்ணம்பாளையம், சூலுார் உள்ளிட்ட பேரூராட்சிகள், 12 க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், 50 குக்கிராமங்கள் உள்ளன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதேபோல், சுல்தான்பேட்டை ஸ்டேஷனுக்கு உட்பட்டு, 17 ஊராட்சிகளில், 1.50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். செட்டிப்பாளையத்துக்கு உட்பட்ட பேரூராட்சி, ஊராட்சிகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.

கிட்டத்தட்ட, 4 லட்சம் பேருக்கு, ஒரு இன்ஸ்பெக்டர், ஆறு எஸ்.ஐ., க்கள், மட்டுமே உள்ளனர். போலீசாரும் தேவைக்கு குறைவாகவே உள்ளனர்.
பரந்து விரிந்த நிலப்பரப்பு, அதிக மக்கள் தொகை உள்ள இப்பகுதிகளில் அடிக்கடி நடக்கும் விபத்துகள், குற்ற சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை தடுக்கவும், குறைக்கவும் போலீசார் திணறி வருகின்றனர். குற்றப்பிரிவுக்கு என தனி போலீசார் இல்லாததால், வேலைப்பளுவால், போலீசார் நெருக்கடிக்கு உள்ளாகின்றனர்.
மாநகராட்சியுடன் சேர்ப்பு சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட மயிலம்பட்டி, நீலம்பூர் உள்ளிட்ட ஊராட்சிகள் கோவை மாநகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளன. மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் கோவை விமான நிலைய பிரதான நுழைவாயில் நீலம்பூர் பகுதியில் அமைய உள்ளன. இதனால், வாகன போக்குவரத்தும், மக்கள் நெருக்கமும் அதிகரிக்கும். போக்குவரத்து சீர் செய்தல், பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, ஏராளமான போலீசார் தேவைப்படும் சூழ்நிலை உருவாகும். மயிலம்பட்டி, நீலம்பூர் பகுதியில் ஐ.டி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. தினமும் புது குடியிருப்புகள் உருவாகி வருகின்றன. அதனால், குற்ற சம்பவங்களும் அதிகரித்துள்ளன. கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறுகின்றனர்.
நீலம்பூரில் புது ஸ்டேஷன் கடந்த ஐந்து ஆண்டுகளாக சூலுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லையை பிரித்து, நீலம்பூரில் புதிய போலீஸ் ஸ்டேஷன் உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, கடந்த ஏப்., 29ம் தேதி சட்டசபையில், நீலம்பூரில், ரூ. 4.88 கோடி செலவில் புதிய போலீஸ் ஸ்டேஷன் உருவாக்கப்படும், என, முதல்வர் அறிவித்தார்.
மூன்று மாதங்கள் ஆகியும் இதுகுறித்து அரசாணை வெளியிடப்படவில்லை, என, கூறப்படுகிறது. இதனால், நீலம்பூரில் புதிய ஸ்டேஷன் வருமா, வராதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையில், இருகூர், காளப்பட்டி, மருதமலை உள்ளிட்ட இடங்களில் புதிய ஸ்டேஷன்கள் துவக்க, மாநகர போலீஸ் சார்பில் அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
நீலம்பூரும் மாநகராட்சி எல்லைக்குள் வருவதால், ஸ்டேஷன் துவக்கப்பட்டால், மாவட்ட போலீஸ் நிர்வாகத்தின் கீழ் வருமா, அல்லது மாநகர போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுமா என, தெரியாத நிலை உள்ளது.
Leave a Reply