பாலக்காட்டில் இருந்து, திருச்செந்துாருக்கு செல்லும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில், பொள்ளாச்சிக்கு காலை, 7:20 மணிக்கு கிளம்புகிறது. இந்த ரயிலில் அனைத்து நாட்களும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ரயிலில் இடம் பிடிக்க போட்டா, போட்டி நடக்கிறது.இந்நிலையில், சுதந்திர தினம், கோகுலாஷ்டமி என தொடர்ந்து விடுமுறை நாட்களில் திருச்செந்துார் ரயிலில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.ரயிலில் இடம் பிடிக்க முண்டியடித்து ஏறினர். ரயிலில் நின்று கொண்டும், நடக்கும் இடங்களில் அமர்ந்தும் பயணித்தனர்.
ரயில் பயணியர் ஒருவர் கூறுகையில், ”திருச்செந்துார் ரயிலில் நின்று கொண்டே பயணித்தேன். பாலக்காட்டிலேயே நிரம்பிய நிலையில் ரயில் புறப்படுவதால், பொள்ளாச்சி, உடுமலை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும்,” என்றார்.

ரயில் பயணியர் நலச்சங்க தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள்கூறியதாவது:பாலக்காடு – திருச்செந்துார் ரயிலில், மக்கள் அதி களவில் பயணிக்கின்றனர். மற்ற நாட்களை விட, விடுமுறை நாட்களில் கூட்டம் அதிகம் உள்ளது. பொள்ளாச்சியில் மட்டும் அதிகளவு கூட்டம் உள்ள நிலையில், உடுமலை, பழநி உள்ளிட்ட பகுதிகளில் பயணியர் ஏறும் போது நெரிசல் அதிகரிக்கிறது. இதனால், நின்று கொண்டே பயணிக்கும் நிலை ஏற்படுகிறது.
ஒரு பெட்டியில், 90 சீட்கள் வரை இருக்கலாம். அதில், 200க்கும் மேற்பட்டோர் பயணிக்கும் நிலை உள்ளது. கடந்த, மூன்று நாட்களும் அதிகளவு கூட்டம் காணப்பட்டது. ரயிலில் இடம் இல்லாத நிலையில், உடுமலையில் ரயிலுக்கு வந்த, 200க்கும் மேற்பட்ட பயணியர் இடம் இல்லாமல் திரும்பிச் செல்லும் நிலை காணப்பட்டது.
கடந்த, ஆறு ஆண்டுகளாக ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. திருச்செந்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் பெட்டிகள் இணைத்தால், அங்கு ரயில் நிறுத்த வசதிகள் இல்லை என கூறப் படுகிறது. அங்குள்ள ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
‘பயணியருக்கு சுதந்திரமே இல்லை!’
மேட்டுப்பாளையம் -துாத்துக்குடிக்கு வாரந்திர ரயில் இயக்கப் படுகிறது. வாரந்தோறும், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் இரவு, 7:45 மணிக்கு மேட்டுப்பாளையம் – துாத்துக்குடி ரயில் புறப்பட்டு, இரவு, 9:35 மணிக்கு பொள்ளாச்சி வருகிறது. இந்த ரயிலை திருச்செந்துார் வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் பயனளிக்கும். பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், ‘எக்ஸ்’ வலைதளம் வாயிலாக, சுதந்திர தினநாளில், பாலக்காடு – திருச்செந்துார் ரயிலில் (16731) பயணியருக்கு சுதந்திரமே இல்லை. ஆறு ஆண்டுகளாக தினமும் கடும் நெரிசல் நிலவுகிறது. உடனே கூடுதல்பெட்டிகள் நிரந்தரமாக சேர்க்க வேண்டும், என, ரயில்வே நிர்வாகத்திடம் வலியறுத்தினர்.
Leave a Reply